“தன்னியல்பு வாதத்துக்கு ஆட்பட்டு ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விட்டோம்; மார்க்சிய லெனிய வழிகாட்டுதலின்படி, இரு இனங்களின் உழைக்கும் மக்களின் ஒன்றிணைவில் இலங்கை ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறிவதின் வழியேதான், தமிழ்மக்கள் விடுதலையடைய இயலும்;”- என அந்நாட்களில் நான் இயங்கிய மா.லெ.அமைப்பு முடிவெடுத்தது. இன்று ஷோபா சக்தியும், அ.மார்க்ஸூம் முன்வைக்கிற கற்பனாவாதத்தை மா.லெ.அமைப்பும் அன்று வைத்தபோது நாங்கள் முரண்பட்டோம். சில ஆண்டுகளின் பின்னர், “ஒடுக்கும் பெருந்தேசிய இனம் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும்போது, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோரமுடியும். அவ்வாறு பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள், வலிமையாய்த் திரண்டிராத வேளையில், ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்” தேசிய இனைப்பிரச்சினையின் அடிப்படைகள் - லெனின் - என்ற பகுதி இருப்பதை பரிசீலனை செய்யாமல் விட்டு விட்டோம் என ஈழவிடுதலையை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு அமைப்பு திரும்பியது. போராளிகள் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, தமக்குள்ளே இராணுவாதத்தை செயல்படுத்தாமல் பகைவனை நோக்கி முன் வைப்பது, ஐக்கிய முன்னணி கட்டுவது என்ற விமர்சனங்களை அமைப்பு வைத்தது. அது சதீஷ்குமார், சிராஜீதின், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி, சுகன், அ.மார்க்ஸ் போல விடுதலைப்புலிகள் எதிர்ப்பை மையப்படுத்தி விடுதலைப்போராட்ட எதிர்ப்பாக உருமாற்றியல்ல.